குணச்சித்திர நடிகராகவே தனது திரைவாழ்வை துவங்கி இன்று வரை அதை சிறப்பாக செய்து வருபவர் டெல்லி கணேஷ்.
கதாநாயகர்கள் கூடவே வரும் கதாபாத்திரமாக அல்லது அவர்களுக்கு இணையான வேடங்களை ஏற்றும் அதில் நகைச்சுவையும் கலந்து நடித்தவர் டெல்லி கணேஷ். கமல்ஹாசனின் அதிக படங்களில் நடித்திருப்பார்.
கமல்ஹாசனின் படம் என்றால் அதில் ஒரு சில நடிகர்கள் எப்பொழுதுமே இடம் பெறுவர். அது கமலுடைய கூட்டணி என்றே சொல்லலாம். அதில் முக்கியமான இடத்தை பிடித்திருந்தவர் இவர்.
“அவ்வை சண்முகி” படத்தில் ஜெமினி கணேசனின் மேலாளராக வரும் டெல்லி கணேஷ் நகைச்சுவையில் அசத்தியிருப்பார். இவரின் சினிமா வரலாற்றில் சிறப்பு சேர்த்த ஒரு படம் என்று சொன்னால் அது மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “நாயகன்”.
வேலுநாயக்கராக கமல்ஹாசன், அவருடனே படம் முழுவதும் வரும் ஐயர் கதாபத்திரமாக டெல்லி கணேஷ். போலீசிடம் அடி வாங்கி மருத்துவமனையில் அனுமதி பெற்று, அங்கு வைத்து நடக்கும் ஒரு காட்சியின் வசனத்தில் பாலகுமாரன் எழுதிக் கொடுத்ததோடு இவர் சிலவற்றையும் சேர்த்துக்கொண்டாராம்.

“அடிச்சு கேட்டாங்க உங்கள பத்தி நாயக்கரே, நான் ஒண்ணுமே சொல்லலையே, எனக்கு எங்கயிருந்துதான் தைரியம் வந்துச்சுன்னு தெரியல” அதோடு அந்த வசனம் முடிந்து போகுமாம்.
“நீங்க நல்லா இருக்கனும் நாயக்கரே, நா செத்துட்டு போறேன் உங்களுக்காக செத்தா அது பெருமை தான்”னு சொல்லி முடித்தாராம் டெல்லி கணேஷ்.
‘ஸ்கிரிப்டில்’ இல்லாத போதும் கமல்ஹாசன் அந்த நேரத்துக்கு ஏற்ற வசனம் என்பதோடு அதை பற்றி எதுவும் சொல்லாமல் தனது மகிழ்ச்சியை மட்டும் கமல் வெளிப்படுத்தவே, படத்தில் இணைக்கப்பட்டதாம். தியேட்டரில் இந்த காட்சி வரும் போது ரசிகர்களிடமிருந்து வந்த கைத்தட்டல் சத்தம் காதுகளை கிழித்ததாம் அந்த நாட்களில்.