சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நகர் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி.
தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. குறிப்பாக, தினக்கூலிகள், கட்டபணியாளர்கள் ஒரு சில கட்டுப்பாட்டுகளுடன் தங்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து, முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை திறக்க அரசிடம் கோரிக்கையை வைத்தனர். அந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதியில்லை என்றும் ஆனால், ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளித்து இருந்த நிலையில், இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நகர் பகுதிகளிலும் நாளை (மே.24) முதல் காலை 7மணி முதல் இரவு 7மணி வரை சலூன் கடைகளை திறக்கலாம். குளிர்சாதன வசதி கொண்ட கடைகளுக்கு அனுமதி இல்லை. சளி, இருமல், காய்ச்சல் உள்ளோரை அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.







