தமிழ் திரையுலகில் தற்போது தீயாய் பரவி வரும் சினிமா செய்திகளின்படி, நடிகர் அஜித் குமார் மற்றும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இருவரும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் பணியாற்ற அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ படங்களின் தொடர் சவால்களுக்குப் பிறகு, தனது பெருந்திட்டமான ‘வேள்பாரி’ திரைப்படத்தைத் தொடங்குவதற்கு முன்பு ஷங்கர் வேறு ஒரு புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம். ‘வேள்பாரி’ படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் தற்போது தயக்கம் காட்டி வரும் நிலையில், அஜித்துடன் இந்த புதிய கூட்டணி அமையலாம் என்று கூறப்பட்டுள்ளது. அஜித் தனது ‘டேர்டெவில்’ மற்றும் ‘மங்காத்தா 2’ படங்களை முடித்த பிறகு இந்தத் திட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அஜித் நடிப்பில் பான்-இந்தியத் திரைப்படமாக உருவாகவிருக்கும் ‘டேர்டெவில்’ (Daredevil) குறித்த அதிரடியான புதிய தகவல்களும் வெளியாகியுள்ளன. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிகர் வெங்கடேஷ் ஒரு கேமியோ பாத்திரத்திலும், மோகன்லால் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக அவர்களிடம் கதை கூறப்பட்டு அவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு முழுக்க முழுக்க கமர்ஷியல் திரைப்படமாக உருவாகவுள்ளதால், மலையாளம் மற்றும் தெலுங்கு சந்தைகளில் இதன் ப்ரீ-ரிலீஸ் வியாபாரம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தே சொந்தமாகத் தயாரிக்கும் படமாக இருப்பதால் சம்பளப் பிரச்சினைகள் ஏதுமின்றி, நடிகர்களின் கால்ஷீட் விவரங்கள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகின்றன.













