சமீபகாலமாக தமிழ் இசை உலகில் ஒரு புயலைக் கிளப்பிக் கொண்டிருப்பவர் சாய் அபயங்கர். இவரது ‘ஆசா கூடம்’ மற்றும் ‘ஊரும் பிளட்’ போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தனது இசை உருவாக்கம், விமர்சனங்களை எதிர்கொள்ளும் விதம் மற்றும் சமூக வலைதளங்கள் குறித்து, சாய் அபயங்கர் சமீபத்திய பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
விமர்சனங்கள் குறித்த பக்குவம்
தன் மீதான விமர்சனங்கள் குறித்துப் பேசிய சாய் அபயங்கர், “விமர்சனங்களைக் கண்டு நான் ஒருபோதும் கோபப்படுவதில்லை. அவர்கள்தான் என் இசையின் இறுதிப் பயனர்கள் (End Users). அவர்கள் எதைச் சொன்னாலும் அது என் மீதான அக்கறையினாலும், நான் இன்னும் முன்னேற வேண்டும் என்பதற்காகவுமே சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்கிறேன். ஒரு பாடல் உரையாடலை உருவாக்கினால் அது நல்லதுதான். ‘ஊரும் பிளட்’ பாடல் வந்தபோது முதல் இரண்டு நாட்கள் கலவையான கருத்துக்கள் வந்தன. ஆனால் மூன்றாவது நாள் மக்கள் அதைப் பழகிக் கொண்டு வைரலாக்கத் தொடங்கிவிட்டனர்” என்று மிகவும் பக்குவமாகத் தெரிவித்தார்.

டிஜிட்டல் உலகிலிருந்து விலகி…
இன்றைய இளைஞர்கள் ஸ்மார்ட்ஃபோன் மோகத்தில் இருக்கும்போது, சாய் அபயங்கர் அதிலிருந்து முற்றிலும் விலகி இருக்கிறார். “சமூக வலைதளங்களில் தேவையற்ற விஷயங்கள் அதிகம் உள்ளன. அந்த கவனச்சிதறல்களைத் தவிர்க்கவே நான் ஒரு சாதாரண நோக்கியா ஃபோனைப் பயன்படுத்துகிறேன். இதனாலேயே என்னால் இசையில் அதிக கவனம் செலுத்த முடிகிறது. நான் ஒரு நாளைக்கு 5 முதல் 6 மணி நேரம் மட்டுமே உறங்குகிறேன்” என்று தனது அர்ப்பணிப்பைக் கூறினார்.
இசை வங்கியில் 1000 பாடல்கள்
தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், “என்னுடைய இசை வங்கியில் (Song Bank) தற்போது 1000-க்கும் மேற்பட்ட பாடல்கள் தயாராக உள்ளன. எப்போதாவது எனக்கு இசையில் ஒரு தொய்வு (Mind Block) ஏற்பட்டாலோ அல்லது எனது 60 வயதிற்குப் பிறகோ அந்தப் பாடல்களைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
சுய ஒழுக்கமும், கவனச்சிதறல்கள் இல்லாத உழைப்புமே சாய் அபயங்கரின் இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம் என்பதில் ஐயமில்லை.













