சமீபகாலமாகத் தனது துள்ளலான இசை மற்றும் தனித்துவமான குரலால் இளைஞர்களைக் கவர்ந்து வருபவர் சாய் அபயங்கர். இவரது ‘கட்சி சேர’ மற்றும் ‘ஆசையே’ போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளன. இந்நிலையில், தனது திரைப்பயணம் மற்றும் தனக்குப் பிடித்தமான நட்சத்திரங்கள் குறித்துச் சமீபத்திய பேட்டியில் அவர் மனம் திறந்துள்ளார்.
விஜய்யின் தீவிர ரசிகன்: நடிகர் விஜய் குறித்துப் பேசிய அவர், “நான் விஜய்யின் ரசிகன் என்பதை விட அவரது வெறியன் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று மிகவும் ஆவேசமாகவும் அன்பாகவும் தெரிவித்தார். விஜய்யின் நடனம் மற்றும் திரையில் அவரது துடிப்பான நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேறாத ஆசை: ஒரு இசைக்கலைஞராகத் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய சாய் அபயங்கர், “தளபதி விஜய்க்காக மாஸான ஹிட் பாடல்களைக் கொடுக்க வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன். குறிப்பாக அவர் நடித்த ‘சச்சின்’ மாதிரியான துள்ளலான இசையமைப்பு கொண்ட படங்களுக்கு இசையமைக்க விரும்பினேன்” என்றார். ஆனால், விஜய் தற்போது தனது கடைசிப் படத்தில் நடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்து, சினிமாவில் இருந்து விலகியது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகச் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். ஒரு வெறித்தனமான ரசிகனாகத் தனது தலைவனுக்கு இசையமைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவரிடம் தெரிகிறது.













