தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இவர், சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

விஜய் அண்ணா ஜெயிக்கணும்: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, “தமிழகத்தில் தவெக வெற்றி பெற வேண்டும் என்பதே எனது ஆசை. எனக்கு விஜய்யை ரொம்பவே பிடிக்கும். விஜய் அண்ணா கண்டிப்பாக அரசியலில் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு சக கலைஞராக ஐஸ்வர்யா லட்சுமி அளித்துள்ள இந்த ஆதரவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாக்குரிமை குறித்த ஏக்கம்: தொடர்ந்து பேசிய அவர், தனது மாநிலம் குறித்துக் குறிப்பிடுகையில், “நான் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவள். அதனால் எனக்குத் தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இங்கே எனக்கு ஓட்டு இருந்திருந்தால் நிச்சயமாக எனது ஆதரவை அவருக்குத் தெரிவித்திருப்பேன்” என்றார். விஜய்யை ஒரு அண்ணனாகப் பார்ப்பதாகவும், அவரது அரசியல் பயணம் சிறக்கத் தனது வாழ்த்துகள் எப்போதும் உண்டு என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார். ஐஸ்வர்யா லட்சுமியின் இந்தப் பேச்சு விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.













