தமிழ் திரையுலகில் நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் அவரது முன்னாள் மனைவி ஆர்த்தியின் விவாகரத்து விவகாரம், தற்போது இரு குடும்பங்களுக்கும் இடையிலான பகிரங்கமான குற்றச்சாட்டுப் போராக மாறியுள்ளது. நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது திருமணம் குறித்து ரவி மோகன் வெளியிட்ட அதிரடி புகாருக்கு, ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
“என்னுடையது ஒரு பிளாக்மெயில் திருமணம், என்னை மிரட்டித்தான் இந்தத் திருமணத்தை செய்ய வைத்தார்கள்” என்று ரவி மோகன் செய்தியாளர்கள் முன்னிலையில் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளப் போவதாக மிரட்டியே இந்தத் திருமணம் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், “வேண்டுமானால் அந்தப் பழைய புகைப்படங்களைப் பாருங்கள், இன்று அவர்கள் என்னை இந்த விஷயங்களைப் பேசும் அளவிற்குப் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள்” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
ரவி மோகனின் இந்த பகிரங்கமான புகாருக்கு, ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் 2008-ம் ஆண்டு வெளியான ஒரு வார இதழின் செய்தியைச் சுட்டிக்காட்டி மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “கடந்த 2008-ம் ஆண்டு ஒரு முன்னணி வார இதழில் இது குறித்து முழுப் பக்க அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. அதில் யார் யாருக்கு அழுத்தம் கொடுத்தார்கள், யார் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளும் மிரட்டலில் ஈடுபட்டார்கள் என்பது ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பிலும் திருமணத்தின் உண்மைத் தன்மை குறித்தும், கடந்த காலச் சம்பவங்கள் குறித்தும் மாற்றி மாற்றி அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசி வருவது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில், நேற்று இரு தரப்பிலும் வெடித்துள்ள இந்த ‘பிளாக்மெயில் மேரேஜ்’ சர்ச்சை இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.













