தமிழ் திரையுலகில் நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு உச்சகட்ட மோதலாக மாறியுள்ளது. நேற்று ரவி மோகன் தன் மீது சுமத்திய கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு, ஆர்த்தி ரவி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் மிக ஆவேசமாகவும் அதிரடியாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.
“தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை யாரும் எப்போதும் எழுப்பக் கூடாது, அதுவும் அது ஒரு தாய் சிங்கமாக இருந்தால் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என ஆர்த்தி ரவி எச்சரித்துள்ளார். நேற்று ரவி மோகன் செய்தியாளர்களைச் சந்தித்து, ஆர்த்தி தன்னை கையை அறுத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்துதான் திருமணம் செய்தார் என்றும், தற்போது குழந்தைகளைப் பார்க்க விடுவதில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஆர்த்தி, “என்னுடைய கண்ணியமான அமைதியை யாரும் பலவீனம் என்றோ அல்லது அதை தங்களுக்குச் சாதகமாகவோ பயன்படுத்திக் கொள்ளக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
தன் குழந்தைகளின் நலனுக்காகவும், தனது சுயமரியாதைக்காகவும் தான் எந்த எல்லைக்கும் சென்று உண்மையை உடைக்கத் தயங்க மாட்டேன் என ஆர்த்தி கூறியுள்ளார். “தேவைப்பட்டால் என் குழந்தைகளைப் பாதுகாக்கவும், எனது கண்ணியத்தை நிலைநாட்டவும் நான் எனது கம்ஃபோர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து ஒட்டுமொத்த உலகத்தின் முன்னிலையிலும் உண்மையைச் சொல்வேன். ஏனென்றால் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும்” என்று ரவி மோகனுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்த்தி ரவியின் இந்த உணர்ச்சிப்பூர்வமான சிங்கப் பதிவிற்குத் தமிழ் சினிமாவின் மூத்த நடிகை குஷ்பூ சுந்தர் (Khushbu Sundar) பகிரங்கமாகத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஆர்த்தியின் பதிவில் கமெண்ட் செய்துள்ள குஷ்பூ, “ஒரு தாயிடம் யாரும் வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது. தன் குட்டிகளுடன் இருக்கும் ஒரு சிங்கப் பெண் நீ. உனக்கு இன்னும் அதிக தைரியமும் சக்தியும் கிடைக்கட்டும் என் செல்லமே” என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று பாடகி கெனிஷா பிரான்சிஸ் சென்னை மற்றும் இசைத் துறையை விட்டு வெளியேறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ரவி மோகன் ஆவேசமாகப் பிரஸ் மீட் நடத்தினார். ஆனால், தற்போது அதற்கு ஆர்த்தி மற்றும் திரையுலகினர் தரப்பில் இருந்து வந்துள்ள இந்த ‘மம்மா லயன்’ (Mamma Lion) பதிலடி, கோலிவுட் வட்டாரத்தில் விவாகரத்து விவகாரத்தை அடுத்த கட்டப் புயலாக மாற்றியுள்ளது.













