தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), தனது விவாகரத்து வழக்கு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான மற்றும் உருக்கமான பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் அவர் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.
“முறையான விவாகரத்து கிடைக்கும் வரை நான் இனிமேல் புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை” என ரவி மோகன் அதிரடியாக அறிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் இந்தச் சூழலில், தனது படங்கள் எதுவும் திரைக்கு வராது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். “என்னால் இந்தச் சூழலில் நிம்மதியாக நடிக்க முடியவில்லை. எனக்கு நடந்த தேவையற்ற அவமானங்களையும், பழிச்சொற்களையும் என்னால் இனிமேலும் தாங்கிக்கொள்ள முடியாது” என்று அவர் மிகவும் கனத்த இதயத்துடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குழந்தைகள் மீது தனக்கு இருக்கும் பாசம் குறித்துச் சிலர் விமர்சிப்பது தனக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாக அவர் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார். “Feminism-னா என்னனு தெரியுமா? நானும் ஒரு Feminist தான். ஆனால், என் புள்ளைங்க விஷயத்தில் நான் எப்படி விட்டுக்கொடுப்பேன்? என் பாசத்தைப் பற்றி யாரும் தவறாகப் பேசாதீர்கள். எனக்கு என் குழந்தைகள் மேல் பாசம் இல்லை என்று உங்களால் எப்படிச் சொல்ல முடிகிறது?” என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். சாதுவாக இருந்த தன்னைச் சிலர் வேண்டுமென்றே சீண்டிப் பார்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
தனது திரைப்பயணத்தில் 95 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றிகளைப் பெற்றுள்ளதைத் தற்போதைய விமர்சகர்களுக்கு அவர் நினைவூட்டியுள்ளார். “இவ்வளவு சாதனைகளைச் செய்த என்னை, தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் முன்னால் இதைச் சொல்வதில் எந்தத் தப்பும் இல்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் நீதிமன்றத் தடைகளுக்கு மத்தியில், ரவி மோகனின் இந்தத் திடீர் முடிவு மற்றும் கண்ணீர்ப் பேட்டி ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.













