இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில், பஹத் பாசில் மற்றும் ஷிவதா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ‘புரோடக்ஷன் No 32’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. நேற்றைய தினம் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இப்படத்தில் இணைந்துள்ள மற்றொரு முக்கிய நட்சத்திரம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
‘வட சென்னை’ மற்றும் ‘கே.ஜி.எஃப் 2’ போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான இளம் நடிகர் சரண் சக்தி (Saran Shakthi) இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள அவர், “அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் இந்த அறிவிப்பைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மிகவும் பிடித்த பிரேம் குமார் சாரின் அடுத்த உன்னதமான படைப்பில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களான ’96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகியவற்றில் இருந்து இத்திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என சரண் சக்தி குறிப்பிட்டுள்ளார். “இந்த முறை சாரின் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் வித்தியாசமான ஒரு மேஜிக்கை நீங்கள் வெள்ளித்திரையில் பார்க்கப் போகிறீர்கள். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி” என்று அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் சரண் சக்தி கார்த்தியின் இளம் வயது கதாபாத்திரத்தில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பஹத் பாசில் போன்ற ஒரு நடிப்பு அரக்கனுடன், சரண் சக்தி போன்ற துடிப்பான இளம் நடிகர் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இஷாரி கே கணேஷ் தயாரிப்பில், கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. பிரேம் குமார் – சரண் சக்தி கூட்டணி மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளதால், இத்திரைப்படத்தில் இளைஞர்களைக் கவரும் வகையிலான அழுத்தமான கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.













