தமிழ் சினிமா உலகில் ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’ போன்ற தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் நடிகர் விஷ்ணு விஷால்.
இவரது நடிப்பில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ (Bachelor) படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் உருவாக்கப்படும் என கடந்த காலங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு ‘ஓர் மாம்பழ சீசனில்…’ (Oru Mambalam Seasonyil) என வித்தியாசமான தலைப்பும் வைக்கப்பட்டு, ஆரம்பகட்ட போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், தற்பொழுது இந்த ப்ராஜெக்ட் குறித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு அதிரடி மாற்றத்தை விஷ்ணு விஷால் நேரடியாக உடைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில், விஷ்ணு விஷாலிடம் “இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட ‘ஓர் மாம்பழ சீசனில்’ திரைப்படத்தின் தற்போதைய நிலை என்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால், “நாங்கள் இயக்குநர் சதீஷ் செல்வகுமாருடன் இணைந்து ஒரு திரைப்படம் பண்ணுவது உண்மைதான். ஆனால், முன்பு நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த அந்த ‘ஓர் மாம்பழ சீசனில்’ கதையை நோக்கி தற்பொழுது நாங்கள் நகரவில்லை. அந்தப் ப்ராஜெக்ட் தற்பொழுது கைவிடப்பட்டுவிட்டது” என்று வெளிப்படையாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
பழைய கதை கைவிடப்பட்டாலும் இந்த கூட்டணி உடையவில்லை என்பதை உறுதிப்படுத்திய விஷ்ணு விஷால், “இயக்குநர் சதீஷ் செல்வகுமார் தற்பொழுது எனக்கு முற்றிலும் வேறொரு புதிய கதையை விவரித்துள்ளார் (Narrated another story). அந்த ஒன்-லைன் மற்றும் திரைக்கதை எனக்குப் பயங்கரமாகப் பிடித்துவிட்டது. முந்தைய கதையை விட இந்த புதிய கதை மிகவும் அற்புதமாகவும், மிரட்டலாகவும் (Amazing) அமைந்துள்ளது. எனவே, அதே இயக்குநருடன் புதிய கதையின் மூலமாக மிக விரைவில் களமிறங்கவுள்ளோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவிருக்கும் இந்த புதிய மாஸ் ப்ராஜெக்ட் குறித்த அடுத்தகட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப் பார்க்கப்படுகின்றது.













