தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சூரி (Soori), தனது கடின உழைப்பால் உயர்ந்து பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி வரும் விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்கள் குறித்து அவர் அளித்திருக்கும் அதிரடியான பதிலடி தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து நடிகர் சூரி பேசுகையில், “இப்போது நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டியுள்ளது. பல பேர் எப்போதுமே நம்மிடம் குறை கண்டுபிடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் பத்து நிமிடம் நன்றாகப் பேசினால் கூட, ‘அவன் எப்படி இவ்வளவு நல்லா பேசினான்.. கன்டென்ட்டே கொடுக்கலையே’ என்று யோசிக்கிறார்கள். நான் செய்த தவறுக்காக யாராவது கமெண்ட் செய்தால் அதற்காக நான் வருந்துவேன். அதை அடுத்த முறை திருத்திக்கொள்வேன். ஆனால், வெறுப்புப் பிரச்சாரக் கமெண்ட்களுக்கு நாம் எதிர்வினை ஆற்ற முடியாது. என்னைப்பற்றி கமெண்ட் செய்பவர்கள் முதலில் உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். வேலை வெட்டி இல்லாமல் எங்கோ உட்கார்ந்து கொண்டு கமெண்ட் செய்கிறார்கள். ஆனால், அதை வாசிக்கக் கூட எனக்கு நேரமில்லை, எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன” எனத் துணிச்சலாகத் தெரிவித்துள்ளார்.













