பிரபல நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஆகியோரது நட்பு குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. கெனிஷாவின் 27-வது பிறந்தநாளை முன்னிட்டு, ரவி மோகன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தனது வாழ்க்கையில் ரவி மோகன் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து கெனிஷா பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கெனிஷா, ரவி மோகன் தனது வாழ்க்கையில் நுழைந்த பிறகு பல நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கடினமான காலங்களில் தனக்குத் தூணாக நின்று ஆதரவளித்ததற்கும், தனது சிறிய வெற்றிகளைக் கூட கொண்டாடி ஊக்கப்படுத்தியதற்கும் அவர் ரவி மோகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “உன்னால் என் உலகம் மாறியது” என்று அவர் குறிப்பிட்டுள்ளதுடன், ரவி மோகன் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர் என்பதையும் சுட்டிக்காட்டி, அவர் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
கடந்த 2024-ம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக ரவி மோகன் அறிவித்ததில் இருந்தே, அவருக்கும் கெனிஷாவிற்கும் இடையிலான நட்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன. இருப்பினும், ரவி மோகன் தரப்பில் கெனிஷா ஒரு சிறந்த நண்பர் மற்றும் ‘ஹீலர்’ (Healer) என்று விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். தங்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பு அமைதியானது மற்றும் உண்மையானது என்று கெனிஷா தனது பதிவில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது ரவி மோகன், சிவகார்த்திகேயன் நடித்த ‘பரசக்தி’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ‘ஜீனி (GENIE)’, ‘கராத்தே பாபு’ போன்ற படங்களிலும், அவர் இயக்கி நடிக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ (An Ordinary Man) படத்திலும் பிஸியாக பணியாற்றி வருகிறார். இக்கட்டான சூழலில் தனக்கு ஆதரவாக இருந்த கெனிஷாவிற்கு ரவி மோகன் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்த வைரல் புகைப்படம் கோலிவுட் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.













