சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகையாகத் திகழும் பிரியங்கா சோப்ரா, தனது திரைப்பயணத்தின் தொடக்கக் கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போதெல்லாம், தனது முதல் படமான ‘தமிழன்’ மற்றும் அதில் தன்னுடன் நடித்த தளபதி விஜய் குறித்தும் பேசத் தவறுவதில்லை. அந்த வகையில், தற்போது சமூக ஊடகங்களில் வெளியான ‘Not Skinny But Not Fat’ என்ற புகழ்பெற்ற சர்வதேச போட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், விஜய்யின் அந்தக்கால புகழைப் பற்றியும், ரசிகர்களின் அன்பு குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2002 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான போது, தான் சந்தித்த முதல் அனுபவங்களைப் பிரியங்கா சோப்ரா இதில் விவரித்துள்ளார். “எனது முதல் படம் தமிழன். அதில் என்னுடன் நடித்தவர் பெயர் விஜய். அவர் அங்கே மிகப்பெரிய பிரபலம். நாங்கள் படப்பிடிப்பு தளத்திற்குச் செல்லும் போதெல்லாம், அவரைப் பார்ப்பதற்காகவே நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பார்கள். அவர் நடனமாடுவதையும் நடிப்பதையும் பார்க்க அலைமோதும் அந்தக் கூட்டத்தைப் பார்த்தபோது, ஒரு மனிதருக்குக் கிடைக்கும் அந்த ‘டெமிகாட்’ (Demi-god) உணர்வு எப்படியிருக்கும் என்பதை நான் முதன்முதலில் உணர்ந்தேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
— videoBackUP (@VideoU86095) March 11, 2026
இந்த நேர்காணலில், தான் 18 வயதில் திரையுலகிற்கு வந்தபோது புகழ் (Fame) என்றால் என்ன என்பதை விஜய்யைப் பார்த்துதான் கற்றுக் கொண்டதாகப் பிரியங்கா தெரிவித்தார். இந்தியாவில் சினிமா மீதும், திரையுலக நட்சத்திரங்கள் மீதும் மக்கள் வைத்திருக்கும் மாறாத அன்பு தன்னை வியக்க வைத்ததாகவும், அந்தச் சிறு வயதில் தானும் அப்படிப்பட்ட ஒரு உயரத்தை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் அவர் வெளிப்படையாகக் கூறினார். மேலும், மொழி தெரியாத அந்தச் சூழலில், ஒலிகளை வைத்து மட்டுமே வசனங்களைப் பேசி நடித்த சவால்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.
விஜய் குறித்துப் பிரியங்கா சோப்ரா இவ்வாறு பேசுவது இது முதன்முறையல்ல. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ‘Vanity Fair’ நேர்காணலிலும், விஜய்யின் ஒழுக்கம் மற்றும் எளிமை குறித்து அவர் பாராட்டியிருந்தார். “விஜய் ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால், காட்சிகள் முடியும் வரை அங்கேயேதான் இருப்பார். கேரவனுக்குச் செல்ல மாட்டார். அந்தப் பணிவு என்னிடம் இன்றும் தொடர்கிறது” என்று அவர் முன்பே கூறியிருந்தார். தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சர்வதேச மேடையில் விஜய்யைப் புகழ்ந்து தள்ளியிருப்பது விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களில் பிஸியாக இருப்பதோடு, நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய சினிமாவில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘வாரணாசி’ (Varanasi) படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தளபதி விஜய்யோ தனது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்காகக் காத்திருக்கும் சூழலில், தங்களின் முதல் நாயகி உலக அளவில் புகழ்பெற்ற பின்பும் தங்களது நாயகனைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.













