இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தற்போது மெக்சிகோவில் நடைபெற்று வரும் CCXP 2026 (Comic Con Experience) நிகழ்வில் பங்கேற்று உலகத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தனது வரவிருக்கும் மெகா பட்ஜெட் படமான ‘வாரணாசி’ (Varanasi) குறித்த அப்டேட்களைப் பகிர்ந்து கொள்ள அங்கு சென்ற ராஜமௌலி, யாரும் எதிர்பாராத ஒரு ரகசியத்தை உடைத்துள்ளார்.
ராஜமௌலியின் உலகளாவிய வெற்றிக்கு வித்திட்ட ‘பாகுபலி’ படத்திற்கும் மெக்சிகோவின் பண்டைய மாயன் நாகரிகத்திற்கும் (Mayan Civilization) நெருங்கிய தொடர்பு இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். பாகுபலி படத்தில் வரும் நகரத்தின் மையப்பகுதி மற்றும் சிம்மாசனம் ஆகியவை மெக்சிகோவின் புகழ்பெற்ற ‘சிச்சென் இட்சா’ (Chichen Itza) பிரமிடை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை என அவர் தெரிவித்துள்ளார். இந்தியக் கதையில் மாயன் கலாச்சாரத்தின் தாக்கம் இருந்தது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ படம் குறித்துப் பேசிய ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா, இந்தியாவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையே கலாச்சார ரீதியாக பல ஒற்றுமைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, முன்னோர்களை வழிபடும் முறை இரு நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதால், ‘வாரணாசி’ திரைப்படம் லத்தீன் அமெரிக்க ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது ‘வாரணாசி’ படத்தின் படப்பிடிப்பு அண்டார்டிகாவில் நடைபெற உள்ளதாகவும், அங்கு படமாக்கப்படும் முதல் இந்தியத் திரைப்படம் இதுதான் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகெங்கும் ஏற்படுத்திய தாக்கம் குறித்துப் நெகிழ்ந்து பேசிய ராஜமௌலி, எல்லைகளைத் தாண்டி ஒரு படைப்பு மக்களைச் சென்றடைவதுதான் ஒரு இயக்குநருக்குக் கிடைக்கும் உண்மையான வெற்றி எனத் தெரிவித்தார். 2027-ல் வெளியாகவுள்ள இந்தப் படம், இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.













