பாகிஸ்தானில் முகமது நபிகள் பற்றி அவதூறு கருத்தை பரப்பியதாக, மகளிர் பள்ளி பெண் முதல்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நிஸ்தார் காலனியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் சல்மா தன்வீர். இவர், மாணவர்களுக்கு கல்வி கற்பித்த போது ‘முகமது நபிகள் இஸ்லாமின் கடைசி இறை தூதரல்ல,’ என்று கூறியதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீது 2013ம் ஆண்டு வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை, மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வந்தது.
அப்போது தன்வீரின் சார்பில் ஆஜரான வக்கீல் ‘எனது கட்சிக்காரர் ஒரு பெண் மட்டுமின்றி, மனநோயாளியும் கூட. இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்,’ என்றார். ஆனால், பஞ்சாப் மனநல சுகாதார நிறுவனம் ‘தன்வீரை பரிசோதித்து அளித்த அறிக்கையில், அவர் மனநோயாளி அல்ல விசாரணைக்கு தகுதியுடையவர் என தெரிவித்தது. இதையடுத்து, தெய்வ நிந்தனை செய்ததற்காக தன்வீருக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்தார். ரூ.3000 அபராதம் விதித்தார். பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை சட்டம் மூலம் 1987ம் ஆண்டு முதல் 1,472 பேர் தண்டிக்கப்பட்டு உள்ளனராம்.













