தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றான ‘தனி ஒருவன் 2′ (Thani Oruvan 2) திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) தயாரிப்பில், இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், நடிகர் ரவி மோகன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள இப்படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி (Archana Kalpathi) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தனி ஒருவன் 2’ என்பது மிகச் பெரிய பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டமான படம். தற்போதைய சினிமா சந்தை நிலவரம் மற்றும் வணிகச் சூழல் மேம்பட்டால் மட்டுமே இப்படியான பெரிய பட்ஜெட் படங்களைத் தொடங்க முடியும் என்பதால் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ரவி மோகன், இயக்குநர் மோகன் ராஜா மற்றும் நயன்தாரா உள்ளிட்ட முக்கியக் கலைஞர்கள் அனைவரும் தற்போதைய ஒப்பந்தமான படங்களில் பிசியாக இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சிறிது காலம் ஆகும்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.













