சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நடைபெற்று வருகிறது கிமு 6ம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளி நாணயம் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் கீழடியில் 7, அகரத்தில் 8, கொந்தகையில் 5, மணலூரில் 3 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் முதுமக்கள் தாழிகள், எலும்புக்கூடுகள், உறைகிணறுகள், மூன்று கல் வரிசை கொண்ட சுடுமண் செங்கல்சுவர், மூடியுடன் கூடிய பானைகள், பானை ஓடுகள், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், உணவு குவளை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுகளின் போது கீழடியில் ஏற்கனவே தங்கத்தால் ஆன பொருள் கிடைத்தது. இந்நிலையில் தற்போது சதுர வடிவிலான வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நாணயத்தின் இரு புறமும் சூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன
இந்நிலையில் இது குறித்து அகழ்வாய்வாளர்கள் கூறுகையில், ‘‘கீழடியில் கண்டறியப்பட்ட நாணயத்தின் இருபுறமும் சூரியன், நிலவு, விலங்குகள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது முத்திரை நாணயம் போன்று பயன்பட்டிருக்க வேண்டும்.
இது கிமு 2 முதல் 6ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். எனினும் நாணயத்தின் பயன்பாடு, காலம் உள்ளிட்டவற்றை துல்லியமாக அறிய ஆய்விற்கு அனுப்பப்பட உள்ளது’’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த நாணயம் தொடர்பான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.













