கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உறவினர்கள் துணை இல்லாமல் இருந்த நோயாளி ஒருவருக்கு மருத்துவரே உணவு ஊட்டிவிட்டது பாராட்டுகளைக் குவித்துள்ளது.
கொரோனா வைரஸால் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2900 ஐ தாண்டியுள்ளது.
இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த ஒரு நோயாளி தனிமையில் வாடியுள்ளார். ஊரடங்கால் அவரது உறவினர்களால் மருத்துவமனைக்கு வரமுடியாத சூழல் ஏற்பட உதவிக்கு ஆட்கள் இலலாமல் நோயாளி தனிமையில் வாடியுள்ளார்.
இந்நிலையில் நெப்ராலஜி துறையின் இயக்குனர் மருத்துவர் ஜார்ஜ் ஆப்ரஹாம் ரவுண்ட்ஸ் வந்தபோது அவரது உறவினர்கள் இல்லாததைப் பற்றி அறிந்துகொண்டுள்ளார். இதையடுத்து யாருமில்லாத அந்த நோயாளிக்கு தானே உணவினை ஊட்டிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.







