பாலிவுட்டின் மெகா ஸ்டார் சல்மான் கான் மற்றும் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல்முறையாக இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. தற்காலிகமாக SVC63 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். தளபதி விஜய்யின் வாரிசு மற்றும் மகேஷி பாபுவின் மகரிஷி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த வம்சி முதன்முறையாக சல்மான் கானை இயக்குவதால் இந்த படத்தின் மீது இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மும்பையில் உள்ள கோரேகான் பகுதியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இன்று காலை பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது. இதில் சல்மான் கான் மற்றும் நயன்தாரா இருவரும் கலந்துகொண்டனர். ஜவான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நயன்தாரா நடிக்கும் இரண்டாவது பாலிவுட் படம் இது என்பதால் அவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட படப்பிடிப்பு சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்றும் இதில் முக்கிய ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஒரு பாடலை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
View this post on Instagram
தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ஒரு பக்கா கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகிறது. சல்மான் கான் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த கதையை வம்சி பைடிபள்ளி தயார் செய்துள்ளார். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி மற்றும் அனில் கபூர் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சல்மான் கானின் மாஸ் மற்றும் நயன்தாராவின் நடிப்புத் திறன் இரண்டும் சேரும்போது இந்த கூட்டணி பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனைகளை படைக்கும் என திரையுலகினர் கணிக்கின்றனர்.
2027 ஆம் ஆண்டு ஈத் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். பொதுவாகவே சல்மான் கான் படங்களுக்கு ஈத் பண்டிகை மிகவும் ராசியான ஒன்று என்பதால் இப்போதே வியாபார ரீதியாகவும் இந்த படம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வம்சி பைடிபள்ளி தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று படப்பிடிப்பு தொடங்கியதை உறுதி செய்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சல்மான் – நயன் ஜோடியின் கெமிஸ்ட்ரி திரையில் எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.













