உயிரிழந்த மகன்களின் சடலத்தை பெற்றோர்கள் 15 கிலோமீட்டர் தோளிலேயே சுமந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த தங்கள் மகன்களின் சடலத்தை பெற்றோர்கள் தங்களின் தோள்கள் மீது தூக்கி கொண்டு செல்ல வற்புறுத்தப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகன்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத காரணத்தினால் பெற்றோர்கள் தங்களின் இரண்டு மகன்களையும் பறிகொடுத்து இருக்கிறார்கள்.
இவர்கள் மராட்டிய மாநிலத்தின் கட்சிரோலியை அடுத்த அஹெரி தாலுகாவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காத காரணத்தால் இருவரின் உடல்நிலை மிக மோசமாக இருக்கின்றது. அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரின் உயிரும் பிரிந்து இருக்கின்றது. உயிரிழந்த சிறுவர்களை அவர்களது கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முறையான ஆம்புலன்ஸ் வசதி கூட செய்து கொடுக்கவில்லை.
இதன் காரணமாக அந்த தம்பதி தங்களது பிள்ளைகளின் சடலத்தை சுமார் 15 கிலோமீட்டர் வரை தோளிலேயே சுமந்த கொண்டு சென்று இருக்கிறார்கள். அடையாளம் தெரியாத தம்பதியினர் 10 வயது குட்பட்ட இரண்டு குழந்தைகளின் உடலை தோளில் சுமந்து கொண்டு செல்வதை பார்த்த பலரும் வருத்தம் தெரிவித்து வந்தார்கள். சேறு நிறைந்த காட்டுப்பகுதியில் நடந்து செல்லும் இந்த வீடியோவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டியார் பகிர்ந்து இருக்கின்றார். இது தொடர்பான வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.













