பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரின் தாத்தாவை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், சதர்பூர் பகுதியை சேர்ந்த மொஹாரா கிராமத்தில் வசித்து வரும் 17 வயது பெண்ணை 2 மாதத்திற்கு முன்பு ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். 24 வயதான அஹிர்வார் என்ற நபர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நபர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தார்கள்.
தலைமறைவாக இருந்த அந்த இளைஞன் நேற்று காலை 10.30 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட தொடங்கி இருக்கின்றார். இதனால் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் அந்த சிறுமியின் 60 வயது தாத்தா குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் சிறுமியின் பாட்டி மற்றும் உறவினர் ஒருவருக்கும் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அந்த இளைஞனை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.