வரும் 26ம் தேதி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மதுரையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார்.
இந்நிலையில் மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த சிற்றறிக்கையில், சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல் போன்ற பணிகளை செய்ய மண்டல அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், அரசின் எந்த விதிகளின்படி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியிருந்தார். இவருடன் விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூரும் குறிப்பிட்ட அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமான என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் இதுகுறித்து விளக்கம் அளித்தார். அதில், இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள பிரமுகர் வருகையின் போது வழக்கமாக செய்யப்படும் பணிகள் மட்டுமே தற்போது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஆனாலும் உயர் அதிகாரிகள் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக, தவறுதலாக புரிந்துகொள்ளப்படும் வகையிலும் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
இவ்விளக்கம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே, மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையராக அயற் பணியிலிருந்து வரும் துணை ஆட்சியர் சண்முகம் விடுவிக்கப்படுவதாக உத்தரவு வெளியானது.
இந்த நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.













