தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவருக்குள்ளே இப்படி ஒரு இசையமைக்கும் திறமை இருக்கிறது என்பதை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டிய படம் “சுப்பிரமணியபுரம்”. பின்னணி இசை, பாடல்கள் இவற்றை கேட்கும் பொழுது யார் இந்த படத்திற்கு இசையமைத்தது? என உற்று நோக்க வைத்தது.

அவரது பெயரை கேட்ட பிறகு தான் அட இது நம்ம ஜேம்ஸ் வசந்தன் அல்லவா. அவரிடம் இல்லாத திறமை எது தான்? என வியக்க வைத்தது அந்த படம். தனது வாழ்வில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவத்தினை நினைவு கூர்ந்து இருப்பார் ஜேம்ஸ் வசந்தன்.
கல்லூரிகளுக்கு இடையிலான இசை போட்டி திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆண்டு தோறும் நடக்குமாம். திருவிழா போல் கொண்டாடப்படும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜேம்சஸ் வசந்தன் சென்றிருக்கிறார்.
இவரது கல்லூரி சார்பில் வேறு யாரும் பாட வராததால் அவர் மேடை ஏற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாம். அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வந்திருந்தது இளையராஜாவாம். இளையராஜா உடன் கங்கை அமரனும் வந்திருக்கிறார். நிகழ்ச்சியை துவங்க இசைக்கருவியை தயார் செய்து கொண்டிருந்தார்களாம் ஜேம்ஸ் வசந்தன் குழுவினர்.
அப்பொழுது ‘கிதார்’ கருவி சரியாக செயல்படவில்லையாம். இளையராஜா கங்கைமரனை பார்த்து அது என்னவென்று சென்று பார் என சொன்னாராம்.உடனே மேடை ஏறி கங்கை அமரன் கிட்டாரிலிருந்த பழுதை நீக்கி கொடுத்தாராம்.
பின்னர் ‘உறவுகள் தொடர்கதை’ பாடலை ஜேம்ஸ் வசந்தன் இளையராஜா, கங்கை அமரன் ஆகியோர் முன்னிலையில் பாடி இருந்திருக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பிறகு இளையராஜா ஜேம்ஸ் வசந்தன் பற்றிய விவரங்களை கொடுங்கள் என கேட்டு வாங்கிச்சென்றாராம்.
இளையராஜா முன்னிலையில் பாடல் பாடியதையே நம்பமுடியாமல் நின்ற வசந்தனுக்கு தனது விவரங்களை அவரே தேடி வந்து கேட்டு சென்றது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்ததாம்.









