தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாகப் பிரம்மாண்டமான மற்றும் எமோஷனல் கதைகளைத் தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் (Vels Film Intl), தனது அடுத்த மெகா ப்ராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டாக்டர் இஷாரி கே கணேஷ் வழங்கும் தங்களது நிறுவனத்தின் ‘புரோடக்ஷன் No 32’ (Production No 32) திரைப்படத்தில், இந்திய சினிமாவில் அசாத்திய நடிப்புத் திறமையால் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகர் பஹத் பாசில் (Fahadh Faasil / FAFA) நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
“உணர்வுகள் கதையோடு சங்கமிக்கும் இடத்தில் தான் மந்திரம் தொடங்குகிறது” என்ற அழகான வரியோடு இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புப் போஸ்டர் வெளியாகியுள்ளது. மான்சூன் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், பஹத் பாசிலுக்கு ஜோடியாக பிரபல தமிழ் நடிகை ஷிவதா (Sshivada) முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அண்மைக்காலமாகத் தமிழ் மற்றும் மலையாளத்தில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஷிவதா, முதன்முறையாக பஹத் பாசிலுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்திரைப்படத்தை ’96’ மற்றும் ‘மெய்யழகன்’ போன்ற உணர்வுப்பூர்வமான கிளாசிக் படங்களை இயக்கிய இயக்குநர் பிரேம் குமார் எழுதி இயக்குகிறார். மனித உணர்வுகளையும், உறவுகளையும் திரையில் மிக அழகாகக் கடத்துவதில் வல்லவரான பிரேம் குமார், இந்த முறை பஹத் பாசிலை வைத்து ஒரு புதிய உலகத்தை வெள்ளித்திரைக்குக் கொண்டு வரவுள்ளார். மேலும், ’96’ படத்தின் அசாத்தியமான வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் மூலம் பிரேம் குமார் – கோவிந்த் வஸந்தா மேஜிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
மேலும் இத்திரைப்படத்தில் ஹரிஷ் உத்தமன், கருணாகரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். கோபி பிரசன்னா இப்படத்தின் டிசைன்களை மேற்கொள்ள, முற்றிலும் ஒரு எமோஷனல் மற்றும் அழுத்தமான திரைக்கதையோடு இத்திரைப்படம் உருவாகவுள்ளது. பஹத் பாசிலின் அசாத்திய நடிப்புத் திறமைக்குத் தீனி போடும் வகையில், இயக்குநர் பிரேம் குமார் இந்த புதிய கதையை வடிவமைத்துள்ளதால், கோலிவுட் மற்றும் மாலிவுட் வட்டாரங்களில் தற்போதே இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அலை வீசத் தொடங்கியுள்ளது.













