கொரொனாவால், ஊரடங்கு உத்தரவை இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் மிகுந்த கட்டுப்பாட்டுன் அம்மாநில அரசுகள் கையாளாண்டு வருகிறது. இதனால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அளிக்க அந்தந்த மாநில அரசுகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை நகராட்சி முதல் மாநகராட்சி வரை அனைத்து இடங்களிலும் அதிதீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். இந்த வகையில், கிருமிநாசினி சுரங்கம் என்ற சுரங்கப் பாதையை திருப்பூர் மாவட்டத்தில் முதன் முதலாக அமலுக்கு வந்தது.
அதன்படி, அத்தியாவசிய தேவைக்காக கடைகளுக்கு செல்லும் மக்கள் அந்த கிருமிநாசினி சுரங்கத்தை கடந்து செல்லவேண்டும், அப்படி செல்லும்போது சுரங்கத்தில் இருந்து மக்களின் மீது தெளிக்கப்படும் கிருமிநாசினிகள் கிருமிகளை அழித்துவிடும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு கிருமிநாசினி சுரங்கங்கள் அமைக்க தடை விதித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்து பாதையை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.
மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது பயனற்றது என்பதோடு தீங்கும் விளைவிக்கும் இனி எந்த இடத்திலும் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கவும் வேண்டாம், பயன்படுத்தவும் வேண்டாம் என்று தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தடை விடுத்துள்ளார்.







