தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் பிரம்மாண்ட சாலைப் பிரச்சாரத்தை (Roadshow) மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த புனித அந்தோணியார் தேவாலயத்திற்குச் சென்று மெழுகுவர்த்தி ஏந்தி, முட்டிப்போட்டு நடந்து சென்று பிரார்த்தனை செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் இது “தேர்தல் நேரத்து நாடகம்” மற்றும் “விளம்பர உத்தி” என விமர்சிக்கத் தொடங்கினர்.
விஜய்யின் இந்த செயலுக்கு ஆதரவாகவும், விமர்சனங்களுக்கு பதிலடியாகவும் நடிகர் ஸ்ரீமன் ஒரு முக்கிய கருத்தைப் பகிர்ந்துள்ளார். விஜய் குறித்து ஸ்ரீமன் கூறுகையில், “நேற்று விஜய் தேவாலயத்தில் முட்டிப்போட்டு பிரார்த்தனை செய்ததை சிலர் தேர்தல் விளம்பரம் என்று விமர்சிக்கிறார்கள். ஆனால், எனக்கு தெரிந்தவரை விஜய் தனது ஒவ்வொரு பட ரிலீஸுக்கு முன்பும் இதேபோல் பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இது இன்று நேற்றல்ல, கடந்த 30 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து பின்பற்றி வரும் ஒரு ஆன்மீக நடைமுறை” என்று தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தின் போது விஜய் மசூதி மற்றும் கோவிலுக்கும் சென்று அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் மரியாதை செலுத்தினார். இருப்பினும் தேவாலயத்தில் அவர் முட்டிப்போட்டுச் சென்றது தான் அதிக விவாதங்களை உருவாக்கியது. ஸ்ரீமனின் இந்த விளக்கம், விஜய்யின் செயலை விமர்சித்தவர்களுக்கு ஒரு தெளிவான பதிலை கொடுத்துள்ளது. “விஜய் எதையும் விளம்பரத்திற்காகச் செய்யமாட்டார், அது அவரது தனிப்பட்ட நம்பிக்கை” என ஸ்ரீமன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
வரும் ஏப்ரல் 23, 2026 அன்று தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், தற்போது மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் திரையுலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஸ்ரீமன் போன்ற சக நடிகர்களின் இந்த வெளிப்படையான ஆதரவு தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.













