தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் தற்போது முழுமையான ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகிறார். நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், இன்று மகாராஷ்டிராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
நேற்று காலை திருச்செந்தூர் முருகனைத் தரிசித்த விஜய்க்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, அவருக்கு ‘வேல்’ மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை சீரடி சென்றடைந்த விஜய், அங்குள்ள சாய்பாபா சன்னதியில் நீண்ட நேரம் மனமுருகி வேண்டினார். குறிப்பாக, சாய்பாபாவின் பாதங்களைத் தொட்டு அவர் கண்களை மூடி வழிபாடு செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

சாதாரண உடையில், எவ்வித ஆரவாரமும் இன்றி ஒரு சாமானிய பக்தனாக விஜய் இந்தத் தரிசனங்களை மேற்கொண்டு வருகிறார். “நேற்று முருகன்.. இன்று சாய்பாபா..” என விஜய்யின் இந்த ஆன்மீகப் பயணம், அவரது ஆதரவாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றிவிட்டு, அதன் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், மன அமைதிக்காகவும் வெற்றிக்காகவும் அவர் இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மே 4-ம் தேதி தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நிகழும் என விஜய் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கும் சூழலில், விஜய்யின் இந்தத் தொடர் கோயில் தரிசனங்கள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.













