இன்று காலை மக்களிடம் வீடியோ மூலம் பேசிய மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி வீடுகளில் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றுங்கள் எனக் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு மோடி மீண்டும் நான்காவது முறையாக மக்களிடம் உரையாட இருக்கிறார் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நாளை காலை 9 மணிக்கு. ஒரு சிறிய வீடியோ மூலம் இந்திய மக்களிடம் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்’ எனக் கூறியிருந்தார்.
எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இதுபற்றி பேசிய மோடி ‘சமூக விலகல் காரணமாக நாம் ஒவ்வொருவரும் தனியாக இருந்தாலும் நம்மோடு 130 கோடி இந்தியர்களும் உள்ளனர். நமது ஊரடங்கு முறையை இப்போது உலகமே பின் பற்றுகிறது. ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள மின்விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள், செல்போன் டார்ச் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் இதை நீட்டித்து நமக்காக உழைக்கும் மருத்துவர்களை நினைத்துப் பார்க்கவேண்டும். . கொரோனா ஏற்படுத்திய இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வருமாறு மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.







