தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஷ்ருதிஹாசன் (Shruti Haasan), சினிமா தாண்டி தனது தனிப்பட்ட கருத்துக்களை எப்போதும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்குள்ள PCOS (Polycystic Ovary Syndrome) பாதிப்பு, மாதவிடாய் கால வலிகள் மற்றும் தாய்மை உணர்வு குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்குத் தாயாக வேண்டும் என்று மிகவும் ஆசை; நான் பெற்றுக்கொள்ளவில்லை என்றாலும் குழந்தையைத் தத்தெடுக்க முழுமையாகத் தயாராக இருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும் PCOS பாதிப்பு குறித்துப் பேசுகையில், “எனக்கு PCOS இருப்பதால் மாதவிடாய் நாட்களில் மிகுந்த வலி இருக்கும். ஒருவேளை ஆண்களுக்கும் மாதவிடாய் வலி வந்தால்தான் பணியிடங்களில் இதற்கும் அதிகாரப்பூர்வமாக விடுமுறை கிடைக்குமோ என எப்போதும் யோசிப்பேன்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான இன்னல்களுக்கு அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் முறையான விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் இதன் மூலம் வலுவாக முன்வைத்துள்ளார். பெண்களின் உடல்நலம் மற்றும் தாய்மை குறித்த இவரது இந்த வெளிப்படையான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.













