பெரம்பலூரை அடுத்து தற்போது கோவையில் பணிபுரியும் 6 காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1600 ஐ தாண்டியுள்ளது.. அதேபோல சிகிச்சையில் குணமாவோரின் எண்ணிக்கையும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் போலிஸார் போன்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவது மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் 10 மருத்துவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பெரம்பலூரில் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் வேலை பார்க்கும் காவல் நிலையம் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி துரிதப்படுத்தப்பட்டது. கோவையில் 75 காவலர்களுக்கு நேற்று கரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 பெண்கள் உட்பட 6 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
அதில் மூன்று பேர் போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றுகின்றனர். இதையடுத்து அந்த காவல் நிலையம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய காவலர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. போத்தனூர் காவல் நிலையம் தற்காலிகமாக வேறு கட்டிடத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







