வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் தமிழக கல்வி முறையை குறை கூறி வருகிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ரவியை சுட்டிக்காட்டி பேசி இருக்கின்றார்.
சென்னை மறைமலை நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகி திருமண விழாவில் விளையாட்டு துறை அமைச்சரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதையடுத்து பேசியவர் கூறியதாவது “இந்தியாவிலேயே மிக சிறந்த கல்வி முறை ஒன்று இருக்கிறது என்றால் அது தமிழகத்தில் மட்டும் தான்.
தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்கள் இன்று பல்வேறு தளங்களில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். தமிழக பாடதிட்டத்தில் படித்தவர்கள் விஞ்ஞானிகள் ஆகவும் மிகப்பெரிய மருத்துவர்களாகவும் இருக்கிறார்கள். சில வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் இதை ஏற்க முடியாமல் தான் மாநில அரசின் கொள்கையின் மீது குற்றம் கூறுகிறார்கள்.
ஆசிரியர் பணி அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் பணி. தமிழக பாடத்திட்டத்தை யார் குறை கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாடு பாடத்திட்டது முறையை குறை கூறினால் அது தமிழக ஆசிரியர்கள் மாணவர்களை அவமதிப்பதற்கு ஒப்பாகும். மாணவர்களை சுயமாக சிந்தித்து செயல்பட தூண்டுவதுதான் சிறந்த கல்வி முறை.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் தான் வருங்காலத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். தமிழக கல்விமுறையின் தரம் மோசமாக இருப்பதாக ஆளுநர் ஆர் என் ரவி பேசியிருந்த நிலையில் அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து இருக்கின்றார்.













