தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜய், இன்று காலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அரசியல் பயணத்தைத் தொடங்கிய பிறகு அவர் மேற்கொள்ளும் இந்த ஆன்மீகப் பயணம் அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நேற்று இரவு 11 மணி அளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாகத் திருச்செந்தூருக்குப் பயணம் மேற்கொண்ட அவர், இன்று காலை பட்டு வேட்டி மற்றும் மேல் துண்டு அணிந்து பாரம்பரியத் தோற்றத்தில் கோயிலுக்கு வருகை தந்தார். அவருக்குத் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோயிலின் உள்ளே சென்ற விஜய், முருகப் பெருமானை மனமுருகி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் நினைவுப் பரிசாக வெள்ளி வேல் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. கையில் வேலுடன் விஜய் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ‘பட்டு வேட்டி சட்டையில் பக்கா தமிழனாக விஜய்’ என அவரது ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

விஜய் திருச்செந்தூர் வருவதை முன்னிட்டு அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும், தனது தலைவனைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அங்குத் திரண்டதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த விஜய், தனது ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டார்.
அரசியல் மாநாடுகள் மற்றும் கட்சிப் பணிகளில் பிஸியாக இருக்கும் விஜய், திடீரென திருச்செந்தூர் சென்று முருகனைத் தரிசித்தது, வரும் தேர்தலுக்கான ஒரு ஆன்மீகத் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. தரிசனம் முடிந்து அவர் தற்போது மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டுள்ளார்.













