தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ், ஒரு தீவிரமான ‘கமல் வெறியர்’ என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்திய பேட்டி ஒன்றில், உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படம் வெளியானபோது தான் சந்தித்த சவால்கள் மற்றும் ஒரு ரசிகனாக தான் அடைந்த பரவசத்தைப் பகிர்ந்துள்ளார்.
“விஸ்வரூபம் ரிலீஸ் சமயத்தில் தமிழ்நாட்டில் பல சிக்கல்கள் இருந்ததால் என்னால் படத்தை இங்குப் பார்க்க முடியவில்லை. அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் உணர்ச்சிகரமான அழுத்தத்தையும் கொடுத்தது. எப்படியாவது படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற பிடிவாதத்தில் முதலில் கேரளா சென்றேன். ஆனால் அங்கு நான் சென்ற தியேட்டர் திருப்திகரமாக இல்லை. உடனே அங்கிருந்து பெங்களூருக்குப் பயணம் செய்தேன். அங்குப் படம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் வேலை செய்த வங்கியில் (Bank) விடுமுறை எடுத்துவிட்டு, ஒரே நாளில் இரண்டு ஷோக்களைப் பார்த்தேன்” என்று லோகேஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் அந்தப் படத்தின் ஐகானிக் காட்சிகளில் ஒன்றான இடைவேளை ட்ரான்ஸ்பர்மேஷன் சீன் குறித்துப் பேசுகையில், “திரையில் அந்தத் தருணத்தைப் பார்த்தபோது என்னைக் கட்டுப்படுத்த முடியாமல், மயக்கம் போடும் அளவுக்குக் கத்தித் தீர்த்தேன்” என்றார். லோகேஷ் கனகராஜின் இந்தப் பகிர்வு, கமல் ஹாசனுக்கும் அவருக்குமான அந்த ‘குரு-சீடன்’ பந்தத்தை மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளது. ஒரு சாதாரண ரசிகனாகத் திரையரங்கில் கத்திய அதே லோகேஷ், பின்னாளில் தனது ஆதர்ச நாயகனை வைத்து ‘விக்ரம்’ போன்ற ஒரு மெகா ஹிட் படத்தைக் கொடுத்தது சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது.













