தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வுள்ள நிலையில் விலையுயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் சமூக இடைவெளியை ஒழுங்காக கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுபானம் வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக கவசம் அணிந்தும், அடையாள அட்டையுடனும் வர வேண்டும்…இதில், அவரவர் ஆதார் , வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள அட்டையாக கொண்டு வர வேண்டும் என மாவட்ட கண்காணிபாளர் தெரிவித்துள்லார்.
இந்நிலையில் குடிப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக டெல்லியைப் போல தமிழகத்திலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் படி குவார்ட்டர் 10 ரூபாயும், ஹாஃப் 20 ரூபாயும், ஃபுல் 40 ரூபாயும் உயர்த்தப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மதுப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.







