மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ (Sardar 2) திரைப்படம் குறித்து, படத்தின் இயக்குநரான பி.எஸ். மித்ரன் மற்றும் நாயகன் கார்த்தி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்துப் பேசிய இயக்குநர் பி.எஸ். மித்ரன், “சர்தார் 2 நன்கு பரிச்சயமான உலகத்தையும் கதாபாத்திரங்களையும் கொண்டதுதான், ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட ஒரு மண்டலத்தை ஆராய்கிறது. இது முதல் பாகம் போலல்லாமல், ஒரு உளவியல் சார்ந்த ஒரிஜின் கதை போன்ற உணர்வைத் தரும். வழக்கமான ஆக்ஷன் படங்களில் ஒரு பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றும் நாயகன் கதை இருக்கும்; ஆனால் இதில் ஒரு அட்வென்ச்சர் பொருளை நோக்கி நாயகனும். வில்லனும் பயணிக்கிறார்கள். க்ளோஸ்டு-ரூம் மிஸ்டரி மற்றும் அட்வென்ச்சர் கலந்த இந்த புதிய ஜானரை ரசிகர்கள் திரையில் நிச்சயம் ரசிப்பார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு கடந்த ஒரு ஆண்டாக இப்படத்தின் எடிட்டிங் பணிகளைச் செய்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, “சர்தார் 2 ஒரு சிறந்த சமூகக் கருத்துள்ள நல்ல ஸ்பை ஆக்ஷன் திரைப்படமாகும். இப்படத்தின் ஆழத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள, இரண்டாம் பாகத்தைப் பார்ப்பதற்கு முன் முதல் பாகமான ‘சர்தார்’ திரைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வருவது நல்லது. உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ‘இந்தியன்’ படம் எத்தகைய முக்கியமானதோ, அதேபோல் என் சினிமா வாழ்க்கையில் ‘சர்தார்’ எனக்கு மிக முக்கியமான படமாகும். தொடர்ந்து 3 ஆண்டுகள் பரிசோதனை முயற்சியிலான படங்களில் நடித்த பிறகு, எனக்கு மிகவும் அவசியமான ஒரு கமர்ஷியல் திரைப்படமாக இது அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.













