‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘பெத்தி’ (Peddi). இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்க்ஷன் டிராமாவாக உருவாகும் இப்படம், திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் 30, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகச் சில வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
View this post on Instagram
ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு ஸ்பெஷல் பாடல் மற்றும் சில முக்கியமான இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு இரண்டு யூனிட்களாகப் பிரிக்கப்பட்டு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நடிகர் ராம் சரண் இப்படத்திற்கான டப்பிங் பணிகளையும் ஏற்கனவே தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இந்தப் படத்தின் மூலம் நேரடித் தெலுங்குத் திரையுலகில் ஒரு அழுத்தமான இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் ஜோடி முதல்முறையாக இணைந்திருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பிரம்மாண்டமான பிரமோஷன் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளப் படக்குழு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சென்னை, மும்பை, பெங்களூரு மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் ரசிகர்கள் சந்திப்பு மற்றும் பிரஸ் மீட்கள் நடைபெறவுள்ளன.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. குறிப்பாக ‘ராய் ராய் ரா ரா’ (Rai Rai Raa Raa) பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி ரிலீஸை முன்னிட்டு, அமெரிக்காவில் ஏப்ரல் 29-ம் தேதியே பிரீமியர் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதற்கான அட்வான்ஸ் புக்கிங் வரும் மார்ச் 27-ம் தேதி, அதாவது ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டுத் தொடங்கப்பட உள்ளது ரசிகர்களுக்குக் கிடைத்த கூடுதல் இனிப்பான செய்தியாகும்.
ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் கிராமப்புற பின்னணியில் உருவாகும் இந்தப் படம், ராம் சரணின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் மற்றும் விஎஃப்எக்ஸ் (VFX) வேலைகள் இணையாக நடைபெற்று வருவதால், ரிலீஸ் தேதியில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று படக்குழுவினர் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளனர்.













