பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை அறிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கபப்ட்டவர்களின் எண்ணிக்கை 33,00,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 35000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2400 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. முதலில் அறிவித்த ஏப்ரல் 14 அன்று முடிந்த நிலையில் மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஊரடங்கை இன்னும் இரு வாரங்களுக்கு நீட்டித்துள்ள மத்திய அரசு மேலும் சில வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பற்ற பச்சை மண்டல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை சமூக இடைவெளியோடு திறக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதுகுறித்து மாநில அரசு இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பச்சை மண்டலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே உள்ளது. அந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.







