ஊரடங்கு நேரத்தில் சென்னையில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்ற சினிமா துணை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். அந்த தவிப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்காங்கே திருட்டுத் தனமாக மதுபாட்டில்கள் 10 மடங்கு வரை அதிகவிலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது சம்மந்தமாக நடந்த சோதனையில் சென்னையில் துணை நடிகர் ஒருவரும், ஓட்டுனர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர் நகர் போலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா மெயின் ரோட்டில் துணை நடிகர் ரிஸ்வான் என்பவரிடம் இருந்து 57 குவார்ட்டர் பாட்டில்கள், 12 பீர் பாட்டில்கள், ரூ.2300 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பிய திரௌபதி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் அளித்த தகவலின் படி பிரதீப் மற்றும் ஓட்டுனர் தேவராஜ் ஆகியோரிடம் இருந்து மது பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் சினிமா வட்டாரத்தில் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் சரக்குகளை 1000 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்துள்ளனர்.







