இயக்குநர் சுந்தர் சி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருந்த #THALAIVAR173 படத்தில் இருந்து தான் விலகியதற்கான காரணங்கள் குறித்துச் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் சுந்தர் சி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், எதிர்பாராத விதமாக அந்தப் ப்ராஜெக்ட்டில் இருந்து அவர் விலகினார். இது குறித்துப் பல வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது சுந்தர் சி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சுதந்திரமாகச் செயல்பட விருப்பம்: அவர் தனது பேட்டியில், “உண்மையில் சொல்லப்போனால் ரஜினி சார் படத்தில் எனக்கு அதிக அழுத்தம் இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக நான் எனது விருப்பம் போலத்தான் படங்களைச் செய்து வருகிறேன். மக்களுக்குப் பிடிக்கும் என எனக்குத் தோன்றினால் அதைச் செய்துவிடுவேன். ஆனால், இவ்வளவு பெரிய படத்தைச் செய்யும்போது அது தனிநபர் சார்ந்த முடிவாக இருக்க முடியாது” என்று தனது சூழ்நிலையை விளக்கியுள்ளார்.

முறையாகத் தெரிவித்தே விலகல்: மேலும், “அந்தப் ப்ராஜெக்ட்டுக்கும், வாய்ப்பு கொடுத்தவர்களுக்கும் உண்மையாக இருக்க முடியாது என்ற எண்ணம் வந்ததால்தான் விலகினேன். இதற்கு ரஜினிகாந்தோ, கமல்ஹாசனோ காரணமில்லை. ரஜினி சாரிடம் முறையாகச் சொல்லிவிட்டுத்தான் நான் விலகப் போவதாக அறிவித்தேன்” எனச் சுந்தர் சி கூறியுள்ளார். சுந்தர் சியின் இந்த நேர்மையான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
#THALAIVAR173 திரைப்படத்தை, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிக்ககியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.













