சென்னையில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. போதுமான அளவிற்கு மழை பொழிவை கொடுக்கக்கூடிய இந்த பருவமழையினால் வெள்ள பாதிப்புகளும் ஏற்படுவது வழக்கம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுத்துறைகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும்.
அதேபோல் இந்த ஆண்டும் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. அமைச்சர்கள் கே என் நேரு, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் இதற்கு தலைமை தாங்கினார்கள். இந்த கூட்டத்தில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் குமரகுருபன் எம்பிக்கள் தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் ஆர் டி சேகர், கருணாநிதி, அரவிந்த் ரமேஷ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கார்த்திகேயன், சித்திக் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றி விவாதம் செய்யப்பட்டது. எம்பி, எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துக் கூறினார்கள். பருவமழையின் போது சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி வீட்டுக்குள் புகுந்து விடுகின்றது.
அதுபோன்ற நிலைமை இந்த முறை வரக்கூடாது என்று எடுத்துரைத்தார். மேலும் அடையாறு, பங்கிகாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, கேப்டன் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களுக்கு தூர்வாரும் பணியும் விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நீர் எளிதாக செல்லும் வகையில் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
கால்வாயில் பெருக்கெடுத்து வரும் உபரி நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்து வெள்ள பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் விவாதம் செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் பெய்யும் கனமழையை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
கடந்த ஆண்டில் பருவமழையின் போது தண்ணீர் தேங்கிய பகுதிகளை இந்த முறை தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளும்படி அமைச்சர்கள் கூறினார்கள். ஏற்கனவே கடந்த மாதம் 16ஆம் தேதி நடந்த பருவமழை பாதிப்பு முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டத்தின் போது சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்க வலியுறுத்தி இருந்தனர். அப்போது சரியாக பதில் கூறாததால் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. எனவே இதில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.













