தமிழகத்தில் பேருந்து கட்டணங்களின் விலை உயர்த்தப்படுமா? என்பதற்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து இருக்கின்றார்.
இது தொடர்பாக சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியிருந்ததாவது: “போக்குவரத்து துறை அமைச்சராக நான் இருக்கின்றேன். எங்கள் வழி நடத்துனர் முதலமைச்சர். எங்களுக்கு தெரியாமல் பேருந்து கட்டணம் உயர்வு அன்புமணிக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்பதுதான் நீங்கள் சொல்ல வேண்டும்.
தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி என்பது கிடையாது. இதனால் போக்குவரத்துதுறை மிகப் பெரிய நஷ்டத்தில் இருக்கின்றது. கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தொழிலாளர்களை கூறி வருகிறார்கள். தனியார் பேருந்து உரிமையாளர்களும் இந்த கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
நம் மக்கள் மீது அந்த சுமையை ஏற்றக்கூடாது என்பதற்காக அந்த எண்ணத்தில் இருந்து இதுவரை பேருந்து கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கின்றது. ஆம்னி பேருந்துகளுடைய புகார் கடந்த ஆண்டு விட தற்போது குறைந்து இருக்கின்றது. அதிக கட்டணம் வசூலிக்கும் எந்த ஆம்னி பேருந்துகள் என்று தெரிந்தவுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். வங்கியின் நிதி உதவியுடன் பேருந்து வாங்குகின்றோம்.
ஊருக்கு ஏற்றது போல் சில மாற்றங்கள் செய்து பேருந்துகள் வரவுள்ளது. தற்போது பொதுமக்களிடமிருந்து புதிய கருத்துக்கள் வருகின்றன. அதையும் நாங்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறி வருகின்றோம். தாழ்த்தள பேருந்து என்பது மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின் பெயரில் வாங்கப்பட்டிருக்கின்றது.
தமிழகத்தில் குறுகிய சாலையில் பேருந்துகளை இயக்க முடியாத இடங்களில் மினி பேருந்துகளை இயக்கக்கூடிய கட்டாயம் இருக்கின்றது. மக்கள் நலனுக்காகவும் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மினி பஸ் தொடர்பாக அடுத்த கட்டமாக முழு கொள்கை வெளிப்படும்” என்று அவர் கூறியிருந்தார்.







