தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் மற்றும் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இணைந்து, ஹைதராபாத்தின் கோகாபேட் (Kokapet) பகுதியில் அதிநவீன மல்டிபிளக்ஸ் திரையரங்கமான ‘அல்லு சினிமாஸ்’ (Allu Cinemas)-ஐத் தொடங்கியுள்ளனர். மார்ச் 12 அன்று தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட இந்தத் திரையரங்கம், மார்ச் 14 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தத் திரையரங்கம் திறக்கப்பட்ட முதல் நாளே சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இதில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப வசதிகள் இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சில சாதனைகளைப் படைத்துள்ளன.
View this post on Instagram
ஆசியாவிலேயே மிகப்பெரிய டால்பி சினிமா திரை!
‘அல்லு சினிமாஸ்’ மல்டிபிளக்ஸின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் ஸ்கிரீன் 1 ஆகும். இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய டால்பி சினிமா திரையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 75 அடி அகலம் கொண்ட இந்தப் பிரம்மாண்ட திரை, உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய டால்பி திரையாகக் கருதப்படுகிறது.
இதில் டால்பி விஷன் (Dolby Vision) 4K லேசர் புரொஜெக்ஷன் மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) 360 டிகிரி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு ஒரு தியேட்டருக்குள் இருக்கிறோம் என்பதைத் தாண்டி, கதையோடு ஒன்றிப் போகும் ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கிறது. திரையரங்கின் உட்புறம் முற்றிலும் கருப்பு நிறத்தில் (Pitch-black) வடிவமைக்கப்பட்டுள்ளதால், படத்தின் வண்ணங்கள் மற்றும் வெளிச்சம் மிகவும் துல்லியமாகத் தெரிகிறது.
View this post on Instagram
விலை குறைவு.. தரம் அதிகம்!
பொதுவாக இவ்வளவு பெரிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட திரையரங்குகளில் டிக்கெட் விலை 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இருக்கும். ஆனால், அல்லு சினிமாஸ் நிர்வாகம் பொதுமக்களுக்காக மிகவும் குறைவான விலையையே நிர்ணயித்துள்ளது.
சாதாரண இருக்கைகள்: ரூ. 295
ரெக்லைனர் இருக்கைகள்: ரூ. 350
ஹைதராபாத்தின் முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், சாதாரண மக்களும் இந்த உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை அனுபவிக்க முடியும். தற்போது மார்ச் 14 முதல் ‘F1: The Movie’ மற்றும் ‘Avatar: Fire and Ash’ போன்ற பிரம்மாண்ட படங்கள் இந்த டால்பி திரையில் திரையிடப்பட்டு வருகின்றன. வரும் மார்ச் 18 மற்றும் 19 தேதிகளில் ‘துரந்தர் 2’ (Dhurandhar 2) மற்றும் பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.
இயக்குனர்களுக்கு கௌரவம்!
இந்தத் திரையரங்கின் மற்றொரு சிறப்பம்சம் அதன் லாபியில் அமைந்துள்ள ‘Wall of Greats’. இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான எஸ்.எஸ். ராஜமௌலி, மணிரத்னம், வெற்றிமாறன், சுகுமார் மற்றும் அட்லீ போன்றோரின் புகைப்படங்கள் இந்தச் சுவரில் இடம்பெற்றுள்ளன. சினிமா மீது அல்லு அர்ஜுன் கொண்டுள்ள காதலையும், படைப்பாளிகளுக்கு அவர் தரும் மரியாதையையும் இது காட்டுகிறது.
புக்கிங் பார்ட்னராக ‘புக் மை ஷோ’ (BookMyShow) நிறுவனம் பிரத்யேகமாகச் செயல்படுகிறது. கோகாபேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐடி ஊழியர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களுக்கு இந்த அல்லு சினிமாஸ் இனி ஒரு முக்கியமான கொண்டாட்டத் தலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.













