இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் கோலிவுட்டின் கமர்சியல் கிங் அட்லீ கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அவரது பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு ‘ராக்கா’ (Raaka) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை அட்லீ இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, ஒரு எக்ஸ்பெரிமெண்டல் ஆக்ஷன் திரில்லராக இந்தப் படம் உருவாக உள்ளது.
இன்று வெளியான டைட்டில் போஸ்டரில் அல்லு அர்ஜுன் மொட்டை அடித்து, கண்களில் மை தீட்டி மிகவும் ஆக்ரோஷமான லுக்-கில் மிரட்டுகிறார். அவருக்கு முன்னால் ஒரு பெரிய மிருகத்தின் கை நகங்களுடன் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படத்தில் அவர் ஒரு ‘வேர்வல்ஃப்’ (Werewolf) கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ என்ற ஆவலைத் தூண்டியுள்ளது. அட்லீ தனது வழக்கமான மசாலா ஃபார்முலாவை விட்டு வெளியே வந்து, ஹாலிவுட் தரத்தில் ஒரு மேஜிக்கைச் செய்யத் தயாராகிவிட்டார்.

பான்-இந்தியா என்பதையெல்லாம் தாண்டி இந்தப் படம் ஒரு ‘பான்-வேர்ல்ட்’ (Pan-World) சினிமாவாகத் தயாராகி வருகிறது.
இந்தப் படத்திற்காக ஹாலிவுட்டின் முன்னணி விஎஃப்எக்ஸ் (VFX) தொழில்நுட்பக் கலைஞர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ‘அயன் மேன் 2’ மற்றும் ‘ட்ரான்ஸ்பார்மர்ஸ்’ போன்ற படங்களில் பணியாற்றிய ஜேம்ஸ் மேடிகன் போன்ற ஜாம்பவான்கள் இந்தப் படத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்து போயுள்ளார்களாம். படத்தின் திரைக்கதை இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு உலகைத் திரையில் காட்டும் எனப் படக்குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.

இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பாலிவுட் குயின் தீபிகா படுகோன் நடிப்பது கூடுதல் பலம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்தப் படம், உலகளாவிய சந்தையைக் குறிவைத்து எடுக்கப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 2027-ம் ஆண்டு இந்தப் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லீயின் மாஸும் ஹாலிவுட் ஆக்ஷன்னும் இணையும் இந்த ‘ராக்கா’, இந்திய சினிமாவின் பெருமையை உலகளவில் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.













