தமிழ் திரையுலகில் ‘தல’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் குமார் (Ajith Kumar), திரையில் காட்டும் மாஸை விட நிஜ வாழ்க்கையில் அவர் செய்யும் மனிதாபிமான செயல்களுக்காகவே பலராலும் மதிக்கப்படுபவர். விளம்பரம் இல்லாமல் பலருக்கு உதவி செய்து வரும் அஜித்தின் மற்றொரு நெகிழ்ச்சியான செயலை ‘எஃப்.ஐ.ஆர்’ (FIR) பட இயக்குனர் மனு ஆனந்த் (Manu Anand) தற்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். தன் வாழ்வில் அடுத்தடுத்து நடந்த மரணங்களால் நிலைகுலைந்து போயிருந்த போது, அஜித் செய்த உதவி தன்னை எப்படி மீட்டது என்பதை அவர் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகியிருந்த மனு ஆனந்த், தனது தந்தை மற்றும் சகோதரனை வெறும் இரண்டு மாத இடைவெளியில் அடுத்தடுத்து இழந்துள்ளார். இந்தத் துயரத்தால் இந்தியா திரும்பிய அவர், தனது சகோதரனின் கடைசி ஆசையான ‘சினிமா கனவை’ நனவாக்கப் போராடினார். தனது சகோதரனின் நினைவாக ஒரு அறக்கட்டளையைத் தொடங்கிய போதுதான், அந்தத் தகவல் அஜித்தின் கவனத்திற்குச் சென்றுள்ளது. உடனே மனு ஆனந்தைத் தொடர்பு கொண்ட அஜித், “உங்கள் வாழ்வில் ஏதோ ஒரு பெரிய பாதிப்பு நடந்திருக்கிறது என்று எனக்குத் தெரியும்” எனக் கூறி, எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.
ஒரே ஒரு முறையோடு நிற்காமல், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் தருவதாக அஜித் உறுதியளித்ததுதான் மிகப்பெரிய விஷயம்.

அஜித் குமார் வெறும் பண உதவியோடு மட்டும் நிற்பவர் அல்ல, சக மனிதனின் வலியையும் உணரக்கூடியவர் என்பதற்கு இன்னொரு சம்பவத்தையும் மனு ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
முழங்கை காயத்தால் அவதிப்பட்ட ஒரு நபருக்கு, தனக்கு சிகிச்சை அளித்த அதே அறுவை சிகிச்சை நிபுணரிடம் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற அஜித் ஏற்பாடு செய்துள்ளார். தனது செல்வாக்கை ஒரு சாமானியனுக்காகப் பயன்படுத்தி அவருக்கு மறுவாழ்வு கொடுத்த அஜித்தின் இந்தச் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
சினிமா என்பது வெறும் வியாபாரமாக மாறிப்போன இந்தச் சூழலில், சக கலைஞனின் துயர் துடைத்த அஜித்தின் இந்த முகம், அவர் ஏன் ஒரு ‘மாஸ்’ லீடர் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.













