ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற பெயரில் விஜய் கட்சி ஒன்றை தொடங்கி இருக்கின்றார். இந்த கட்சி வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றது. அதனால் மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டங்கள், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை நடத்தி வருகிறார்கள்.
கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் விஜய் அவ்வபோது அழைத்து பேசி வருகின்றார். மேலும் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றார். சமீபத்தில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் மரணத்திற்கு எதிராக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் சமீபத்தில் மாணவ மாணவியர்களுக்கும் விருது வழங்கும் விழாவையும் நடத்தி இருந்தார்.
அதில் நீட் குறித்து விஜய் பேசியிருந்தார். கூடிய விரைவில் இந்த கட்சி சார்பாக மாநாடு ஒன்று நடத்துவதற்கு திட்டமிட்டு வருகிறார்கள். தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு திருச்சியில் நடைபெறுவதாக இருந்த நிலையில் அதனை சேலத்தில் நடத்தலாமா? என தொடர்ந்து புஜ்ஜி ஆனந்த் ஆலோசனை செய்து வருகின்றார்.
மாநாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் மற்றும் எவ்வளவு தொண்டர்கள் பங்கேற்கலாம் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு கட்சி தலைவர் விஜய் இடம் விரைவில் வழங்கப்பட இருக்கின்றது. இதை விஜய் விரைவு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என கூறப்படுகின்றது. இந்நிலையில் விரைவில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் விஜயின் அரசியல் கலந்த அனல் பேச்சை கேட்பதற்கு தொண்டர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் மாநாடு நடத்துவது பற்றி நிர்வாகிகள் தொண்டர்களிடம் கருத்துக்களை கேட்டதில் எல்லோரும் தமிழகத்தின் மையப் பகுதியாக திருச்சி இருப்பதால் அங்கு மாநாடு நடத்தினால் சரியாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் இன்று ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், அரசியல் விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.







