சென்னையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படுவர்கள் வீடுகளில் எச்சரிக்கை செய்யும் விதமாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாளை மாலையில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழகம் எங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அமைச்சர் வேலுமணி தன் ட்விட்டர் பக்கத்தில் ‘கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 3000 வீடுகள் சென்னையில் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கும் ஸ்டிக்கர்கள் அவர்களது வீட்டின் வெளியே சென்னை மாநகராட்சியால் ஒட்டப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.







