---Advertisement---

Parthiban Case Update: “சாதி இல்லைனு சொல்ல ஏன் இவ்வளவு போராட்டம்?” சான்றிதழ் வாங்கிய பின் பார்த்திபன் கேள்வி! வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் சொன்ன அதிரடி அறிவுரை!

Published on: April 29, 2026
Actor Parthiban interacting with the press outside Chennai High Court after his 'No Caste' certificate case was closed.
---Advertisement---

திரையுலகில் எப்போதும் தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுக்கும் நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், சட்ட ரீதியாகவும் ஒரு முன்னுதாரணமான போராட்டத்தை இன்று வெற்றிகரமாக முடித்துள்ளார். தனக்கு ‘ஜாதி மற்றும் மதமற்றவர்’ (No Caste, No Religion) எனச் சான்றிதழ் வழங்கக் கோரி அவர் தொடர்ந்த வழக்கை, அவருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று முடித்து வைத்தது.

நீதிமன்றத்தின் முக்கிய அறிவுரை: இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சாதி, மதமற்றவர் என்பதை நாம் நமது நடத்தையின் மூலம்தான் காட்ட வேண்டுமே தவிர, அதற்காகச் சான்றிதழ் அவசியமில்லை. சுய பிரகடனமும் தேவையில்லை” என்று கருத்து தெரிவித்தனர். இருப்பினும், பார்த்திபனின் கோரிக்கையேற்று சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டதால் வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.

Actor and Director Parthiban speaking to the media about social equality and his casteless certificate outside the Madras High Court.
ஜாதி ஒழிப்பு குறித்து பேசும் நடிகர் பார்த்திபன்: லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

பார்த்திபனின் ஆவேசப் பேட்டி: நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், இந்த நடைமுறையில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டினார். “நான் இந்தச் சாதி என்று சொல்லி சான்றிதழ் வாங்குவது சுலபமாக இருக்கிறது. ஆனால் சாதி இல்லை என்று ஒரு சான்றிதழ் வாங்க நான் நீதிமன்றம் வரை வரவேண்டியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும்” என்று ஆதங்கப்பட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “சாதி, மதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் எனப் பல தலைவர்கள் கூறியுள்ளனர். அதை நான் செயல்படுத்த முயலும்போது ஏன் இவ்வளவு முட்டுக்கட்டை போடுகிறார்கள்? ஜாதி, மதம் தேவை என்பவர்களை நான் தவறாகச் சொல்லவில்லை, ஆனால் எனக்கு அது வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

தயாராகும் பெரிய லிஸ்ட்: திரையுலகில் முதன்முதலாக இந்தச் சான்றிதழை வாங்கியுள்ள பார்த்திபன், தனக்குப் பலரிடமிருந்து ஆதரவு கிடைப்பதாகத் தெரிவித்தார். “இயக்குநர் விக்ரமன் சார் எனக்கு கால் பண்ணி, உங்க லிஸ்டில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். என்னைப் போலவே சாதி அடையாளத்தைத் துறக்க விரும்பும் பலரின் பெயர்களுடன் ஒரு பெரிய லிஸ்ட் தயாராகிக் கொண்டிருக்கிறது” என்று ஒரு புதிய சமூக மாற்றத்திற்கான விதையைப் பார்த்திபன் விதைத்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.