தமிழ் சினிமாவின் ‘பிஸி’யான நடிகர்களில் ஒருவரான தனுஷ், அடுத்தடுத்து பல மெகா பட்ஜெட் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வரிசையில் தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது. ‘இரும்புத்திரை’, ‘சர்தார்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தனுஷ் தனது அடுத்த படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தியை விடவும், இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகும் நிறுவனம் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்.
பாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பன்சாலி புரொடக்ஷன்ஸ்’ இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் தனுஷ் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகிய இரண்டு தேசிய விருது கலைஞர்கள் முதல்முறையாக ஒன்றிணைய உள்ளனர். இந்தப் படம் தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பி.எஸ்.மித்ரன் இந்தக் கதையை முதலில் ‘கே.ஜி.எஃப்’ புகழ் நடிகர் யஷிடம் தான் கூறியுள்ளார். ஆனால், யஷ் தற்போது ‘டாக்ஸிக்’ மற்றும் ‘ராமாயணம்’ ஆகிய படங்களில் பிஸியாக இருப்பதால், இந்தக் கதையில் அவரால் நடிக்க முடியாமல் போனது. அதன் பின்னரே இந்தக் கதை தனுஷிற்குச் சென்றுள்ளது. கதையைக் கேட்ட தனுஷ், மித்ரனின் திரைக்கதையால் கவரப்பட்டு உடனடியாகச் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சமூக அக்கறை கொண்ட ஒரு டெக்னோ-திரில்லர் கதையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.













