தமிழ் திரையுலகின் ‘பவர் கப்பிள்’ என்று அழைக்கப்படும் அஜித் குமார் – ஷாலினி தம்பதியினர் தங்களது 26-வது திருமண நாளை கடந்த ஏப்ரல் 24 அன்று கொண்டாடினர். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதில் அஜித்துடன் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மற்றும் இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், வெங்கட் பிரபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஒரு புகைப்படம் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இயக்குநர் ஏ.எல்.விஜய் அஜித்தின் கார் பந்தயப் பயணத்தை மையமாக வைத்து ‘ரேஸிங் ஈஸ் நாட் ஆக்டிங்’ (Racing Isn’t Acting) என்ற ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் அஜித்தின் 55-வது பிறந்தநாளான மே 1, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்துடன் இணைந்து #AK64 படத்தில் பணியாற்றி வருகிறார். பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கா மாஸ் கமர்ஷியல் படமாக இருக்கும் என ஆதிக் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்தப் புகைப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இருப்புதான் ரசிகர்களை உச்சகட்ட உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ‘மங்காத்தா’ படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது வெங்கட் பிரபு அஜித்துடன் இணைந்திருப்பது, பல ஆண்டுகளாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் ‘மங்காத்தா 2’ படத்திற்கான ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தையாக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அஜித்தின் இந்த ‘ட்ரிபிள் டிரீட்’ பிளான் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய விருந்தாக அமையப்போகிறது.













